தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள் !
கன்னங் குழியச் சிரிக்கும் கவின் நிலவு
கைப் பிடித்து நடக்கின்ற குழந்தை !
வில்லாக வளைந்து விரல்வித்தை காட்டும்
பள்ளிப் பருவத்து பசும்பொன் பதுமை !
கண்ணில் தெரிகின்ற வண்ணப் பாடல்கள்
காதில் இனிக்கின்ற வளரிளம் பருவம் !
கணக்கீடு தவறாமல் கூட்டிக் கழிக்கும்
கடும் உழைப்புக் காலங்கள் !
மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரித்து
மகிழ்ந்திருக்கும் நேரங்கள் மனசுக்குள் மத்தாப்பு !
கண்ணெல்லாம் மகிழ கவின் படைப்பில் !
கருத்தெல்லாம் கசிந்துருகும் காவியங்கள் !
சிந்தை எல்லாம் இனிக்கின்ற தீம்பாடல்கள்
செவிகளிலே ஒலிக்கின்ற தேன் மொழிகள் !
ஒன்றாக ஒலிக்கும் ஒற்றுமைக் குரல்கள்
நன்றாக வாழ்கின்ற நானில மக்கள் !
அன்பொன்றே பொருளாய் அகமுழுதும்
மகிழ்கின்ற இல்லறப் பூங்கா !
இவரெல்லாம் நடமாடும் நானிலமே
நமக்கு நல்வாழ்வுப் பூங்கா !
இவையெண்ணி ! நாமெல்லாம் மனந்திறந்து
சிரிக்கும் நாளே நமக்குத் திருநாளாகும் !
செல்வி ஷங்கர்
14.10.2013 திங்கட்கிழமை
Monday, October 14, 2013
Subscribe to:
Posts (Atom)