Friday, June 27, 2008

வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை - 25.06.2008

அன்பின் சக பதிவர்களே !!
தோழி நானானி மதுரை வருவதாக எங்க வீட்டு ரங்க்ஸ் சொன்னாங்க. நானும் உடனே கட்டாயம் சந்திக்க வேண்டுமெனக் கூறினேன். சென்ற முறை ரங்க்ஸ் மட்டும் சென்று, திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறினார். பதிவு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. இம்முறை நானும் சந்திக்க வேண்டுமெனக் கூறியதால் 25ம் தேதி காலை சென்று பேசிவிட்டு வந்து, அன்று மாலை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தார். நானானியுடன் அவரது கணவரும் வந்திருந்தார்.

இச்சந்திப்பு பற்றிய எனது எண்ணங்கள் :

இந்தக்காலத்துச் சின்னப் பசங்க எல்லாம் பேசிப்பாங்கள்ள ! எங்க வூட்டுக்கு, "கெஸ்ட்" வந்துருக்காங்கன்னு - யாருன்னா "அத்தே!" ம்பாங்க. இப்போ அத்தைங்கற உறவெல்லாம் "கெஸ்ட்" ங்குற நிலைக்குப் போயிடிச்சி. அப்படித்தாங்க நாலு பேரு சந்திச்சாங்க மதுரயிலே ! அவங்க யாருன்னா - நானு, நானானி, எங்க வூட்டுக்காரரு, அவங்க வூட்டுக்காரரு ஆக நாலு பேர்.

பிள்ளைகள் சந்தித்தால் :
உனக்கு எப்போ ஸ்கூல் இல்ல காலேஜ் ?
நீ எப்ப டூர் போன ?
உனக்கு எந்த ஸ்டாரெப் பிடிக்கும் ?
யாரோட "சாங்க்" ரொம்ப இன்டெரெஸ்ட் ? ன்னு பேசுவாங்க.
ரொம்பச் சின்னவங்களா இருந்தா ஒருத்தரோட ஒருத்தர் விளையாடுவாங்க.

இளம் வயதினர் சந்தித்தால் :
தங்கள் கனவுகளைப் பேசுவார்கள் / காண்பார்கள்.

நடுத்தர் வயதினர் சந்தித்தால் :
குடும்பத்தை, குழந்தைகளை, செய்தொழிலைப் பற்றிப் பேசுவார்கள்.

பெரியவர்கள் சந்தித்தால் வாழ்க்கை பற்றிப் பேசுவார்கள்.

"நானானி" என்ற பெயரை நான் வலையில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுத்துகளைப் படித்த போது மேலோட்டமாக ஒரு எண்ணம் மிகுந்தது. நேரிடையாகப் பார்த்த போது மதிப்பு மிக்க ஒரு தோற்றம், அமைதிப் பொலிவு, இயல்பான சொற்கள் - இதழ் உதிர்த்த போது. இலக்கியம் கற்ற ஆற்றல் - இயற்கையை, சூழ்நிலையை, குடும்பத்தை, பிள்ளைகளை, பணியை, பாசத்தை பகிர்ந்து கொண்ட உரையாடல்.

அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு தட்டப்பட்டதும், சிறிது நேர இடைவெளிக்குப் பின் கதவு திறந்தது. கண்களில் மகிழ்ச்சி - இதழ்களில் புன்னகை - அமைதித் தோற்றம் அளித்த நானானி எங்களை அன்புடன் வரவேற்றார்.அந்த நேரம் அவரது கணவர் நட்பினைப் பார்க்கச் சென்றிருந்தார்.

என்ன படித்தோம் - எங்கே படித்தோம் - எப்படிப் பணியாற்றினோம் - எவ்வளவு காலம் சென்னையில் வாழ்ந்தோம் - பிள்ளைகள் வளர்ந்து, படித்து பறவையாய்ப் பறந்தது வரை பேசினோம். பேரப் பிள்ளைகள் பேசி விளையாடுவது - அவர்களின் சூழ்நிலை எல்லாம் நினைவில் நின்றது.

வலைப்பதிவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியா விட்டாலும், அகமகிழ்ந்து பேசிக் கொள்வதைக் கூறி மகிழ்ந்தோம். பதிவர்களின் பதிவுகள் / பின்னூட்டங்கள் படித்தால் ஒரு அமைதி கிடைக்கிறது. எத்தனையோ வேலைகளுக்கிடையில், இரவு எவ்வளவு நேரமானாலும், அந்த வலைப் பூவினைப் படிக்கையில், உரையாடும் அன்பு வலை ஒரு உற்சாக ஊக்கி என்று பேசி மகிழ்ந்தோம்.

நட்பினைக் கண்டு வந்த நானானியின் கணவரும் எங்களுடன் உரையாடி மகிழ்ந்தார். நாடு - அரசு - அலுவல் - அயல்நாடுகள் என்று கருத்து வட்டம் விரிந்து பறந்து சென்று வலைக்குள் புகுந்தது. ஒரு நல்ல மாலைப் பொழுது இனிமையாய்ப் பறந்தது.

பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
எதிர்காலம் எப்படி என்ற சிந்தனையுடன்
மாநாடு கலைந்தது.

செல்வி ஷங்கர்
------------------

நான் எனதருமைத் தோழி நானானியை அவரது எண்ணங்களை ஒரு பதிவாகப் போட வேண்டுகிறேன்.
செ ஷ
---------