Saturday, December 27, 2008

இயற்கை மாற்றம் .......... !

மாலைக் கதிரவனே !
அப்படி என்ன மகிழ்ச்சி ?
மார்கழி மாலையில்
மகிழ்வாய்த் தோன்றுகிறாய் !

வட்டமிட்டு வரைந்தாற்போல்
கார்மேகக் கூட்டத்தில்
கலைநயமாய்க் காண்கின்றாய் !

செக்கச் சிவந்த
செந்தனலாய் ! சிதறாமல்
அள்ளி வைத்த தீப்பந்தாய் !
விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !

கட்டிடச் சுவரில்
காக்கைப் பள்ளிக்கூடம் !
கலைந்த மேகங்கள் !
களையாக நடுவில் நீ !
கரும் பச்சை இலைகள் !
காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றுகள் !
கவின் மாலைப் பொழுதின்
காவியமாய் நீ !
மலைகளின் மடியில்
மகிழ் வட்டம் !

பனிக்காற்று பார்வை பட்டு
பரவசமாய்ப் பறவைக் கூட்டம் !
கூட்டுக்குச் செல்லும் குதூகலத்தில்
வரிக்கோடாய் வானில்
சிறகடித்துச் சிலிர்க்கும்
சின்னஞ்சிறு பறவைகள் !

தீர்க்கமாய்ப் பார்க்கின்ற
பார்வையில் பரவசமாய்
பரந்து கிடக்கும் இயற்கை !
பருவ மழையின் பசுமை !

எப்படி நிகழ்ந்தது ?
எப்படி நிகழ்ந்தது !
இந்த இயற்கையின் மாற்றம் !
----------------------------
செல்வி ஷங்கர்
----------------------------

Wednesday, December 17, 2008

பாடம் படிக்குமா உலகம் ?

உதித்தான் கதிரவன் கிழக்கில்
உயிர்த்தெழுந்தது உலகம் !
ஒளியைப் பதித்தான் எங்கும்
விழியைப் பெற்றது உலகு !
வளியை வளைத்தது வானம் !
வனத்தை வளர்த்தது உன்னொளி !
வானம் எங்கும் ஊர்ந்தாய் !
மானம் காக்க மனிதன்
மாண்புறு தொழில் செய்தான்.
உதய சூரியனே நீ
நாளும் உதிக்கின்றாய் !
உன்னத உலகை
ஒளியால் படைக்கின்றாய் !
உன்னை யார் கேட்டார்
உதியென்று ?
ஒழுங்காய் ஒளி பரப்ப
யார் பணித்தார் ?
ஏனென்று கேட்பார்
இல்லையே ! இருந்தும்
செய்கின்றாய் கடமையை !
நேரத்தில் செய்கின்றாய் !
காலத்தில் சிறக்கின்றாய் !
தட்டிக் கொடுப்பார் இல்லை !
தட்டிக் கேட்பார் இல்லை !
தானே செய்கின்றாய் !
சரியாய்ச் செய்கின்றாய் !
உலகம் படிக்குமா பாடம் உன்னிடம் !!!

Tuesday, December 16, 2008

தென்றல் புயலாய் மாறியதேனோ ??????

மழையில் குடையாய்
வெயிலில் நிழலாய்
நினைவில் நிகழ்வாய்
சோதனையில் வழியாய்
சாதனையில் மகிழ்வாய்
போதனையில் பொறுப்பாய்
பாதையில் பலமாய்
தேவையில் நினைவாய்
செயலில் பொருளாய்
ஆற்றிய கடமை
அருமை மக்களாய்
அவிழரும்பானதே !

மணக்கும் மணத்தை
மலரில் அடக்கிய
மலர்ப்பந்தலாய்
மனத்தை மயக்கிய
மலர்களே !

மாற்றம் ஏனோ ?

மலர்களே ! மலர்களே!

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை !

சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !

செல்வங்களே !!
-----------------------------------------

செல்வி ஷங்கர்




Saturday, December 13, 2008

ஓய்வு !

கஞ்சி குடித்த
களைப்பில்
கட்டாந்தரையில்
தூக்கம் !
மடித்த கையே
தலையணை !
கண்ணில் உறக்கம்
கடல்போல் !
காத்திருந்தது
கட்டட வேலை !

Friday, December 12, 2008

ஒரு மழைக்கால மாலை !!!

ஒரு மழைக்கால மாலைப் பொழுதில், எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று சுற்று முற்றும் பார்த்த போது மனத்தில் தோன்றிய கவிதை.

ஒரு பக்கம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்
மறு பக்கம் வைகையாற்றுப் பாலம்
இடையே எங்கள் அடுக்கு மாடிக் கட்டடங்கள்

நான்காம் மாடியில் நடந்த கட்டட வேலைக்கு
கீழ்த்தளத்திலிருந்த மணல் அனைத்தும் நொடியில்
மேலே கொண்டு செல்லப்பட்டது.

இவை அனைத்தையும் கண்ட கண்களின் காட்சி இது.
----------------------------------------------------------------------
சூழ்ந்த மேகங்கள்
தவழும் கோபுரங்கள்
சுற்றிலும் மரங்கள்
வீசிடும் காற்று
சுழன்றிடும் சூழல் !

பளிச்சென்ற கட்டிடங்கள்
பார்க்கவே அழகாய் !
கோடு போட்டாற்போல்
பாலம் ! அதிலே
புள்ளிகளாய் மக்கள் !
போகின்ற பேருந்துகள் !

கொட்டிக் கிடந்த
மணலெல்லாம்
குவியல் குவியலாய்
மாடித்தளத்தில் !
மனிதனின் உழைப்பு !

ஆற்றோரப் பாலம்
அங்கே வண்டிகளின்
பேரிரைச்சல் !

போவோர்
வருவோர்
எல்லாம்
ஓரத்தில் !
--------------------------------
செல்வி ஷங்கர்

Saturday, November 29, 2008

குமுறும் நெஞ்சம் - சிதறும் கண்ணீர்

இப்பதிவு இவ்வலைப்பூவினில் ஐம்பதாவது பதிவாக வெளி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
அமைதிப் பூங்கா அதிர்கிறது !
அறிவியல் வளர்ச்சி சிதர்கிறது !
வளரும் நாட்டின் வளர்ச்சி
தீவரவாத சிந்தையின் சிதையில் !
கதறும் ஓலம் - தகரும் கட்டிடம் !
பற்றும் நெருப்பில் பரிதவிப்பு !
சுட்டு வீழும் உடல்கள் !
உலுக்கும் சீர்குலைவு !
கொதிக்கும் உள்ளம் !
குமுறும் நெஞ்சம் !
சிந்தும் கண்ணீர் !
ஏனிந்த அழிவு ?
எதற்கு இந்தக் குலைவு ?
குண்டு வெடிப்புகள் தருமா குவலயந்தன்னை ?
மடிபவன் மனிதன் !
மடியச் செய்பவன் மனிதன் !
உயிரைக் கொன்று
உடைமைகள் அழித்தால்
உயர்வு வருமா ?
உள்ளம் நிலைக்குமா ?
மனித நேயம் மடியலாமா மண்ணில் ?
ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?
சிந்தித்தால் சிந்தை குலையுமே !
யார் புகட்டுவது அன்பு மனப்பான்மையை ?
வன்னெஞ்சங்களே - வாழ விடுங்கள் வையத்தை !!!
--------------------------------------------------------------

Sunday, November 23, 2008

எண்ணங்கள் - வடிவங்கள்

இறை :
----------
இறைவா வா
குறைவே போ
நிறைவே எங்கும் !
---------------------------------

இடம் :
-----------
வீடு நிறைய
பொருள்கள் !
மனத்தில்
ஏனோ
வெற்றிடம் !
----------------------------------

பொருள் :
---------------
ஓடியபோது
ஒன்றுமில்லை !
நாடியபோது
காணவில்லை !
தேடிய பின்னோ
தேவையில்லை !
---------------------------

ஆசை :
-----------
ஆடிப்பாட
ஆசை !
ஓடிஓடி
நின்றபின் !
----------------------------------

மழலை :
-------------
அடுக்கி வைத்த
பொம்மைகள்
அழகாக !
அழாத
குழந்தைகளாய் !
-----------------------------------

இயற்கை :
-------------
ஆற்று நீரே
அடுக்கு மாடி
கழிவு நீரோடை !
ஆற்றல் மிகு
மனிதா !
மாற்றவேண்டும்
நிலைமை !
-----------------------------------
செல்வி ஷங்கர்
-----------------------------------

Thursday, November 20, 2008

ஒரு கருத்து !

உதிக்கின்ற சூரியனும்
கிழக்கில் !

உண்கின்ற உணவும்
உழைப்பில் !

வருகின்ற அனைத்தும்
வாழ்வில் !

செல்வி ஷங்கர்
------------------------

Sunday, November 16, 2008

மனக் குரல் - எண்ணக் குறள் - 2

செய்தல் நலத்தினை இல்லெனில் யாதொன்றும்
செய்யா திருத்தல் நலம்.

உற்ற துரைத்தல் உவப்பெனில் மற்றது
கற்றலும் கல்லாமை தான்

பெற்றது போற்றி பெரும்பொருள் ஈயின்
இழந்தது தானே வரும்

கற்றது நீங்கின் கவினுலகில் மற்றதென் ?
உற்றது போற்றி வளர்.

போராடிப் பெற்றதெலாம் பூமியில் என்றுமே
மாறாது நிற்பது காண்.

நீரைப் பிடிக்க நிலவைப் பிடிக்கும்
மனிதா ! நிலத்தை மதி.

வியர்க்கும் நிலையில் நிழலை நினையும்
மனமே ! மரத்தை நடு.

வெந்து தணிந்த நிலமெலாம் நீர்சொரிய
வந்து குளிருமா வான்.

-------------------------------
செல்வி ஷங்கர்
-------------------------------

Sunday, November 9, 2008

வாழ்ந்து பார்க்க ........

அவளுக்கு வீடுதான் உலகம் !
வீதிகள் எல்லாம் பாலங்கள் !
அவள் வெளிஉலகை எட்டிப்பார்க்க !

அவளுக்குப் பிள்ளைகள்தான் எதிர்காலம் !
பேசும் சித்திரங்கள் பெருமைப்பட !

அவளுக்குக் கடமைதான் காவல் !
மூச்சுவிட மறக்காத முயற்சி !

அவளுக்கு அன்புதான் செல்வம் !
அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க !

அவளுக்கு அவன்தான் அனைத்தும் !
அரவணைக்கும் ஆக்கச் செயலில் !

அவளுக்கு அவளேதான் வரலாறு !
வாழ்ந்து பார்க்க ! வளர்த்துப் பார்க்க !!

Sunday, November 2, 2008

எத்தனை பெரிது உலகம் ?


என்ன செய்கிறாள் என்னவள் ?

இந்தக் கோட்டையைப் பிடித்து விடுவாளா ?

இல்லை சிகரம் தொட்டு விடுவாளா சின்னவள் ?

எத்தனை பெரிது உலகம் ?

என் கைக் குட்டிக் கரடியை விடவா !

இந்தப் பலகையில் அடக்கவா

அத்தனைக் காட்சியையும் .......... !

நான் எழுதிய எழுத்துகள்

என் பெயரின் பதிவுகள் !

இவைதானா இந்த மொழி !

இதில் தானா இத்தனை படைப்புகள் !

என் கண்களுக்குள் கருத்தாய்ச் சென்று

என் மனத்திரையில் மதியாய்ப் பரவி

நான் வடிக்கும் மழலைக்குள் மகிழ்வாய்

வரை கோடாய் வந்ததே இப்பலகையில் !
செல்வி ஷங்கர் : எங்களுடைய செல்லப் பேத்தி முதன்முதலாய் அவள் பெயரை எழுதிய பலகை


Saturday, October 25, 2008

வளர்ச்சி என்பது வயதா ?

ஐந்து வயதில் ஆர்வம் இருந்தது
பத்து வயதில் பயம் வந்தது
பருவ வயதில் பதட்டம் எட்டிப்பார்த்தது
படிக்கின்ற வயதில் எதிர்காலமே
எண்ணத்தில் மிதந்து சென்றது !
போராடும் போட்டி உலகில்
நீந்தவே பொழுதுகள் சாய்ந்தன
வளர்ச்சி என்பது வயதா ?
இல்லை !
தோற்றத்தின் மாற்றமா ?
சூழ்நிலை புரிந்தது ! சுற்றமும்
நட்பும் விரிந்தது ! நினைவுகள்
நிழலாகின ! கட்டிப்போட்டால்
சுற்றுகின்ற காளைபோல்
கால்கள் கட்டுத்தறியில் !
வட்டத்துக்குள் சுற்றுகின்ற
வண்டியாயிற்று வாழ்க்கை !
ஆனாலும் அதிலோர் சுவை !
சுமைகள் எளிதானால் சுகந்தானே !
சுமையின்றிச் சுற்றும் உலகில்லை !
சுமக்க மறுப்பவர் எவரேனும் உளரோ ?

செல்வி ஷங்கர்

Tuesday, October 21, 2008

வள்ளுவம் வாழ்வின் வழிகாட்டி !





மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு. ( 1993)
-----------------------------------------------------------------------------------------------
நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.



இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !



மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !



இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?



அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !
இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !
பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !
எதிரியை எளிதில் நம்பி விடாதே !
பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !
வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !
சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !
அது கனவிலும் இன்னாது !
வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !
கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !
அன்பில் உயர்ந்து நில் !
என்பும் பிறர்க்கென்று சொல் !
வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !
என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர
நல் வழியே !



அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !



சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !



கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !



அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !



மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !



சினம் கொள்ளாதே !
அது சேர்ந்தாரைக் கொல்லும் !
அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !
மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !
கொல்லா நலத்தது நோன்பு !
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !
எதையும் ஏற்றுக் கொள் !
தோல்விகள் இயற்கை !
எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !
முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !
தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !



இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !
எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !



சிந்தித்துச் செயலாற்று !
ஒழுக்கம் தவறாதே !
சொன்ன சொல் பிறழாதே !
அன்பாயிரு !
அறிவாயிரு !
பண்பாயிரு !
வெற்றி கொள் !
வேடந்தவிர் !
செய்தொழில் போற்று !
சோம்பலை அகற்று !
கொடுத்து வாழ் !
கெடுத்து வாழாதே !
உண்மை பேசு !
உயர்ந்து வாழ் !
அச்சமே கீழ்களது ஆசாரம் !
தன்மானம் இழக்காதே !
தன்னிலையில் தாழாதே !
தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !
வறுமையை நினைத்து துவளாதே !
வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !


இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் வழி என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !



நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !
நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !
நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு !


என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !



வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் !


திருக்குறள் போற்றுவோம் !


உள்ளிருள் நீக்குவோம் !



வருகிறேன் !
வாய்ப்பிற்கு நன்றி !
வணக்கம் !
--------------------------------------------------------
ஆக்கம் : செல்வி ஷங்கர்

--------------------------------------------------------

ஒலி வடிவம் :



---------------------------------------------------------

செல்வி ஷங்கர்

Monday, October 20, 2008

சுமைகள் வேண்டாம் !

அருமைத் தோழி கயல்விழி முத்துலெட்சுமி என்னை ஒரு கதை - குறளின் அடிப்படையில் - எழுத அழைத்தார். அதன்படி இச்சிறு கதை ......

வேகமாகச் சென்று கொண்டிருந்த ராமு சற்றே மர நிழலில் ஒதுங்கினான். ஏதோ சிந்தனையில் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். வெயிலுமில்லை - மழையுமில்லை. ஆனால் காற்று வர மறுக்கின்ற ஒரு புழுக்கமான சூழ்நிலை. மனத்தின் இறுக்கமும் பெருமூச்சாய் வெளி வர, அந்தப் பேருந்து நிறுத்தத்தில், சிமிண்டாலான இருக்கையில் அமர்ந்தான்.

சுற்றுமுற்றும் கண்களை சுழல விட்டான். எல்லாரும் ஏதோ ஒரு வேகத்தில் பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் அந்தச் சாலை இயங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இராமுவின் மனமும் அசை போட்டுக்கொண்டே, அடுத்து தான் செல்ல வேண்டிய பேருந்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

ஆம் ! எப்படியாவது சொன்னதைச் செய்து விட வேண்டும் - ஒரு நாள் போல் நாளை பார்க்கலாம் ! அப்புறம் பார்க்கலாம் ! அவசரப் பட வேண்டாம் ! என்று எண்ணிக் கொண்டே வீட்டு வேலைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போதும். யார் தான் வீட்டில் இதை பொறுத்துக் கொள்வார்கள் ? ஒரு நாளா ? இரண்டு நாளா ? தினமூம் இப்படித்தான். பொறுமைக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

பிள்ளைகளூம் பேசாமலே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். ஏனோ ராமுவிற்கு வெளி வேலைகளில் இருந்த ஈடுபாடு வீட்டு வேலைகளில் அவ்வளவாக இல்லை. வீடும் நம்முடையது தானே ! அந்தந்த வேலைகளை அவ்வப்போதே செய்வோமே என்ற எண்ணம் மட்டும் எப்படியோ அவனுக்கு மறந்து போய் விடுகிறது. இதனால் அவ்வப்போது ஏறபடும் மனச்சுமையை அவன் சுமந்து தான் ஆக வேண்டி இருந்தது. வேலைகள் சுமையாகாமல் பார்த்துக் கொண்டால் நமக்குத் தானே நல்லது அப்பா ! என்று பிள்ளைகள் சொல்லியது இன்றைக்கென்னவோ ராமுவிற்கு பளிச்சென உறைத்தது ! அதனால் தான் வீட்டு வேலைகளைப் பார்க்க விரைந்து கொண்டிருக்கிறான் புத்துணர்வுடன்.

அதிகாரம் : தெரிந்து செயல் வகை

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

விளக்கம் : செய்யக்கூடாத செயல்களைச் செய்வதால் கேடு வரும். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பதாலும் கேடு வரும். எனவே எதனை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்து அதனை அப்போது அப்படியே செய்ய வேண்டும். செய்ல்களே வழிபாடல்லவா !

இப்பொழுது மூன்று பதிவர்களை நான் அழைக்க வேண்டுமாம். யாரை அழைப்பது - யாரை விடுவது ? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு - விட்டு விடுகிறேன் பதிவர்களின் விருப்பத்திற்கு. யாரேனும் மூன்று பதிவர்கள் தொடரலாம். மறுமொழியில் விருப்பத்தைத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

வருக ! வருக !! - கதைகள் தருக! தருக !!

விதிமுறைகள் : திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும். இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்

செல்வி ஷங்கர்

Thursday, October 9, 2008

மாற்றொலி

சுற்றும் உலகம் நின்றால்
சுழலும் மானிடம் என்னாகும் ?
கற்கும் மாந்தர் காண்பது
தெற்கும் வடக்கும் திகழும்
திசையா ? நீந்தும் தீவா ?
சுற்றிச் சுற்றி வந்தாலும்
தட்டித் தட்டிப் பார்த்தாலும்
எட்டி எட்டிச் சென்றாலும்
எங்கும் திகழும் அமைதியே !
சுற்றும் கால்கள் ! சுழலும்
கண்கள் ! காண்பதெல்லாம்
அமைதி ! மின்னல்போலே
மின்னொளி மிளிரும் காலதர் !
மரங்கள் சூழ்ந்த மாடங்கள் !
நிழல்கள் அசையும் மாந்தர் !
காற்றில் மிதக்கும் பேச்சொலி !
கண்கள் நோக்கும் அமைதி !
கால்கள் தேடும் ஓய்வு !
மனமது நினைத்தால் ---------- !!

செல்வி ஷங்கர்

மனக் குரல் - எண்ணக் குறள்

மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் குறளாய் வடித்திருக்கிறேன்.

கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.

அருகிருந்(து) ஆன்றசொல் பேசி விருந்தெதிர்
கொள்ளவே நாளும் நினை.

பாடம் படித்தே பலகலை போற்றிட
வேடம் தவிர்த்தே இரு.

சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.

வளர்ந்த மரங்கள் மலர்ந்த செடிகள்
நிறைந்த வனமே நிலம்.

உண்மை உரைத்தே உவகை நிறைந்திட
நன்மைச் செயலே புரி.

செல்வி ஷங்கர்

Monday, August 11, 2008

யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !

தொட்டில் பிள்ளை
கட்டில் வந்தால்
துன்பம் !

எட்டிப் பார்க்கும்
வயதில் ஏக்கம்
வந்தால் துன்பம் !

தட்டிக் கதவை
தாண்டிப் பார்க்கும்
தழைத்த வயதில்
சோகம் !

முட்டி மோதி
முகத்தின் பொலிவில்
வளர்ந்த இளமை
வாசம் மலர
சோகம் !

சுற்றும் சூழல்
கற்ற கல்வி
கையில் உள்ள
காகிதப் பட்டம் !

ஏறி இறங்கும்
இளமை முறுக்கு !
ஏக்கம் ! தூக்கம் !
எட்டிப் பார்க்க
எடுத்து வைத்த
காலடிகள்!

கணக்குப் பார்க்கும்
காசுகள் ! கையை
விரிக்க ! கால்கள்
ஓடும் ஓட்டம் !

நினைத்துப் பார்த்த
கனவுகள் எல்லாம்
காலச் சக்கரம் !
நிலையாய் நிற்க.

மூச்சு வாங்கினால்
முக்கால் வயது
ஓடி விட்டது !
முதுமை மட்டுமே
கட்டி அணைக்க
காத்து நின்றது !

காகிதப் பட்டம்
கழனி வயலாய் !
கைகள் ஊன்றி
பயிரை வளர்த்தது !

பறவைகள் ! விலங்குகள் !
பார்த்து விரட்ட
பக்கம் ஆட்கள் !
பொத்திப் பொத்திப்
பொறுமை போனது !
ஆசை ! அன்பு !
உணர்வு ! உள்ளம் !
எல்லாம்
மூடிய கதவுகள் !

வளர்ந்த வயதும்
வாழப் பார்த்த
வடிவும் ! வடிகால்
தேட அலைந்த
பார்வையும் !

பாசம் வளர்த்தே
பகிர்ந்து கொள்ள
நட்பாய் ! உறவாய் !
யாரும் இல்லா
இயந்திர ஓட்டம் !

இரும்பைக் கூட
தட்டிப் பார்த்து
அடித்து நிமிர்த்தி
அடங்கும் வகையில்
சேர்க்கும் உலகம்
மனத்தை மட்டும்
மக்கள் இடையே
பாரா முகமாய்
ஓரம் கட்டி
ஒழிப்ப தேனோ ?

சுற்றி நிற்கும்
தொட்டால் சுருங்கி
உலகம் !
கட்டி வளைத்து
ஒரு கடிவாளம்
இட்டது !

உலகின் ஆசை
ஊரின் ஆசை
உறவின் ஆசை
எல்லாம் !
ஓசைப் படாமல்
ஒதுங்கிக் கொண்டது !

உலகம் என்பது
கூட்டிக் கழித்து
நீட்டி நிமிர்ந்து
ஒருகோடு கிழித்தது !
கிழித்த கோடு
கூடாய் அமைய
கொடி மரம்
அசைந்து
நிழலும்
காற்றும்
அங்கே சூழ்ந்தது !

குஞ்சுகள் இரண்டு
கொஞ்சி மகிழ
இயந்திர உலகம்
இளகி விரைந்தது !
கட்டம் கட்டி
கட்டுக்குள் வளைய
காவியம் படித்தது!
காலப் பறவை
பறந்தது ! இது தான்
இங்கேஉலகம் எவர்க்கும் !

செல்விஷங்கர் - 11.08.2008
----------------------------------







Sunday, July 27, 2008

விரைவாய் வந்த வெண்பா !

பாட்டெழுதும் நேரமா ? இங்கே பசுமரத்தின்
காய்கறிகள் காலத்தில் வேக ! கனிவான
நேரத்தில் காண்கின்ற காட்சிகள் கார்போல்
கவிதையாய் வந்தன காண் !
======================================
மலையான வாழ்வில் மனத்தின் நிழல்போல்
நிலையாத நீராய் நினைவிலே ஓடும் !
விலையான பொருளுக்கு வேர்போல் ஆகும் !
கலையாத காலைப் பொழுது !
==============================================
சொல்லாத சொல்லுக்கு நீதுணை ! ஏனடி ?
கல்லாக நின்றாய் ! கனிவாய்நான் பேசும்
முன்பாக ! கன்றுகள் கண்போல் உனையே
அன்பாகப் பார்த்த கால் !
====================================================
மனதுக்குள் மாய்கின்ற மானே ! முளைத்த
விதைதானே மேலும் கிளைத்தது ! ஏனோ
படர்ந்ததோர் பந்தலாய் பாய்விரிய சேய்கள்
மனம்பார்க்க பூத்தது ஏன் ?
=========================================
பாட்டெழுதும் நேரமா இங்கே ! பரிதவிக்கும்
கூட்டுக் குருவிகள் கூடியொன்றாய் ஆடி
மகிழ அழகான மேடை எதுவெனவே
தேடுவதைக் காண்மகளே காண் !
=================================

செல்வி ஷங்கர்

Tuesday, July 22, 2008

உலகம் மலரும் !

நேற்றுப் பெய்த
மழைத் தூறல் !
சற்றே தழைத்த
ஈர மண் !
இயற்கை அளித்த
இன்பப் பரிசு !

அங்கும் இங்கும்
மேயும் ஆடுகள் !
அழகாய்ப் பறக்கும்
குருவிகள் ! ஆற்றின்
கரையில் கீரைப்
பாத்தி ! நீரோ
ஓடை நீர்தான் !
பாறைகள் தெரிய
செடிகள் முளைத்து
கொடிகள் படர்ந்த
பச்சைப் புல்வெளி !

நனைந்த சாரலில்
நிறைந்த நீர்மணல் !
காயும் வெய்யில்
சற்றே ஓய்ந்து
ஈரக் காற்றுடன்
இரவியின் கதிர்கள் !

காலில் செருப்பு
கையில் கொம்பு
தோளில் துண்டு
எண்ணெய் இன்றி
வறண்ட தலையை
கோதிய விரல்கள் !
கண்கள் சுருக்கி
காணும் கால்நடை
கையால் ஒதுக்கி
குனிந்து நடக்கும்
முதிர்ந்த மேய்ப்பான் !

ஏதோ இன்னும்
இயற்கையை நினையும்
ஈரப் புல்வெளி !
மாலை நேரம்
மேகம் மயங்கி
மரங்கள் அசைய
வீசிய காற்றில்
விண்ணில் இருந்து
ஓரிரு துளிகள் !

இதற்கே இத்தனை
ஈரம் என்றால்
சுற்றுச் சூழல்
காற்று ! மழைநீர்
மறித்துத் தேக்கி !
குப்பை கூளம்
கூர்ந்து அகற்றி !
தூரும் வாரி !
தூற்றிய மணலால்
கரைகள் உயர்த்தி !
கன்று மரங்கள்
கணக்காய் நட்டால்
நாடு செழிக்காதா ?

வெப்பக் காற்று
மறைந்து ! பூமி
குளிர்ந்து ! தூய
காற்று வீசாதா ?
பூமி வெப்பம்
தணியத் தணிய
தாரணி செழிக்காதா ?

மலையும் பனியும்
நகர்வது நின்றால்
நானிலம் அதிராதே !
ஆருயிர் அழியாதே !
காப்போம் காப்போம் !
இயற்கை காப்போம் !
உலகம் செழிக்க
உயர்ந்திடும் மரங்கள்
உவப்பாய் நடுவோம்!
உள்ளம் மகிழ்ந்தால்
உலகம் மலரும் !

செல்வி ஷங்கர் - 22082008









Sunday, July 20, 2008

புதிய அறம் பாட வந்த அறிஞன்


பாரதி !

பாதி வயதில் இப்பாருலகை விட்டுச் சென்றவன். அவன் இன்னும் மீதி வயதும் வாழ்ந்திருந்தால், இந்த பாரதத்திற்கு, வீதி அமைப்பதற்குக் கூட விதி வகுத்து விட்டுச் சென்றிருப்பான் ! அந்த செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தையாய் மட்டும் வாழ்ந்துவிட வில்லை ! விதியே ! விதியே ! என் செய நினைத்தாய் தமிழச் சாதியை ? எவ்வகை விதித்தாய் ? என்று தட்டி எழுப்பி, உடலும் உள்ளமும் சோர்ந்தால் மருந்துண்டு; ஆனால் செய்கையும் சீலமும் குன்றினால் உயிர் வாழ வழியில்லை ! என்று நமக்குணர்த்தியவன். தனி அறம் பாட வந்த அறிஞன் இவன் ! புதிய திறம் பாட வந்த மறவன் இவன் !

நாமிருக்கும் நாடு நமது என்று கூட அறியாத மக்களின் மூட நம்பிக்கைகளைத் தகர்ந்தெறிந்தவன். அறியாமை இருளை ஓட்டிய பாரதி, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ! அரண்மனை அரியணையிலும், மாட மாளிகைகளின் பஞ்சணையிலும் தூங்கிக் கிடந்த தமிழ் மொழியை, சொல் புதிது ! சுவை புதிது ! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை ! என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தவன். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! சிந்துக்குத் தந்தை ! செந்தமிழ்த் தேனீ !

சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு, மண்டை உடைந்து, வீதிகளிலெல்லாம் கட்டிப்புரள்கின்ற நிலையை அவன் கண்டானில்லை. சமயச் சண்டைகளைப் போக்க அறம் ஒன்றே போதும் என்று நினைத்தவன். மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன். அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன். சாதிப்படைக்கு மருந்தவன். நம் உள்ளத்தைத் தொட்டு, உணர்வுகளைத் தூண்டுகின்ற இந்த உண்மையை அன்றைக்கு அவன் ஒருவன் தான் துணிந்து கூறினான்.

" ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் !
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன் !
மகமது நபிக்கு மறையருள் வித்தோன் !
ஏசுவின் தந்தை ! எனப்பலரும் உருவகத்தாலே
உணர்ந்து உரைத்திடும் தெய்வம் ஒன்றே ! "

" பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் !"

என்று தெய்வ நீதி உரைத்தவன்.

இந்த நாட்டுக் கல்விக் கொள்கையின் மீது பாரதிக்கு இணையில்லாத ஈடுபாடுண்டு. கல்வியைத் தந்தால்தான் சமுதாயம் விழிப்புறும் என்பதில் நிலையாய் நின்றான். அதிலும் பெண் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும் என்றவன் நினைத்திருந்தான். எங்கேபெண் அஞ்சி அஞ்சியே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விடுவாளோ என்ற அச்சம் பாரதிக்கு இருந்திருக்கிறது ! அதிலும் படிப்பது பாவம் என்ற சூழ்நிலையில் பெண் கல்வி அறிவு பெறாமல் போய் விடுவாளோ என்று கலங்கி இருக்கிறான் ! அவளுக்கு வாழ்க்கை உரிமைகள் இல்லாமல் நசுக்கப் பட்டு விடுவாளோ என்று ஏங்கி இருக்கிறான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு? என்ற காலத்தில் அவன் பெண்ணறம் பேசினான். பெண் முதலில் தந்தைக்கு அடிமை ! பின் கணவனுக்கு அடிமை ! பின் மக்களுக்கு அடிமை ! என்று உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் " தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வம் இந்த நாட்டிலே ! " என்று பெண்ணுரிமை பேசினான்.

அறம் என்பது கடமை !
அறம் என்பது கற்பு !
அறம் என்பது வாழ்க்கை !
அறம் என்பது நீதி !
அறம் என்பது வேதம் !
இவை அத்தனையையும் இந்தச் சமுதாயத்திற்குத் தந்தவன்.

கடமைகளைச் செய்யாதவன் இங்கே வாழ்தல் கூடாது. வாழ்க்கையின் நிலை கற்புடையதாக இருத்தல் வேண்டும். கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ; ஆணுக்கும் உண்டு ! சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் ஒழுக்க நெறி தவறாது வாழல் வேண்டும் என்று வாழ்க்கை அறம் பேசியவன். சமுதாயத்தில் நீதி தலை தூக்க வேண்டும்; அநீதியால் இழைக்கப்படும் கொடுமைகள் மறைய வேண்டும்; இல்லையெனில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று நீதி அறம் உரைத்தவன் பாரதி !

சட்டத்தை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு சாதாரண மக்களை சந்திக்கு இழுக்கும் நிலை கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகக்கூடாது. தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தானடிமை கொள்ளலாமா ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப் படலாமா ? என்று சமுதாய ஒழூக்கம் பேசியவன் பாரதி !

இப்படி தன் பேச்சிலும் மூச்சிலும் கனவிலும் நினைவிலும் நாடு நாடென்று சிந்தித்த பாரதி இந்த நாட்டை உயர்த்துவதற்கு தனி ஒரு அறம் பாடினான் ! தன்மானத்தினை இழந்து ஒருவன் அரச வாழ்வு வாழ்வதை அறவே அவன் வெறுத்திருக்கிறான். மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பரோ ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ ? என்றான்.

வணக்கத்திற்குரியது தாய்நாடு ! அதை வணங்கு ! வாழ்த்து ! ஒற்றுமை கொள் ! என்பதே அவன் உரைத்த அரசியல் அறம் ! இது புதுமை இல்லையா ? இப்படி நாட்டின் எதிர்கால அரசியலைப் பற்றி நாட்டுப்பற்று உள்ள ஒரு உண்மைக் குடிமகனாக நின்று சிந்தித்த அவன் சிந்தனை போற்றுதற்குரியது அல்லவா ? !

செல்வி ஷங்கர் - 20082008




Sunday, July 13, 2008

இமயப்பூவே இந்திரா !

இவ்விரங்கற்பா இந்தியத் துணைக்கண்டத்தின் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி மறைந்த போது, எழுதப்பட்டு, அகில இந்திய வானொலியில், சிறுவர் சோலையில் என் செல்ல மகளால் படிக்கப் பட்டது.
-------------------------------------------------
இமயப்பூவே இந்திரா !

இந்திய வரலாறு இந்திரா இல்லாமலா ?
எண்ணிப் பாரா இமயப்பூவே ! இந்திரா !
உன்னைப் பாரா இந்தியா ! இந்தியாவா ?
இத்தனை அமைதி ! இத்தனை அமைதி !
எங்கே உறங்குகின்றாய் ?

செந்நீர்ப் பெருக்கினை காணிக்கை ஆக்கினாய் !
ஏனெங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணவா ?
நீ தீட்டாத திட்டமில்லை ! தீர்க்காத சிக்கலில்லை !
விதிக்காத சட்டமில்லை ! விலக்காத நீதியில்லை !
நின் நிகழ் காலத் திட்டங்கள் நிலையாய் உள்ளன !
அரசியல் வரலாற்றில் நீயொரு பொன்னேடு !
நின் பொன்னேட்டின் பக்கங்கள் புகழாரம் சூடும் !

இனம் வேறு ! மொழி வேறு ! மதம் வேறு !
என்று வேறுபட்ட பாரதத்தை ஒன்றாக்கினாய் !
மிக நன்றாக்கினாய் ! உலக ஒற்றுமைக்கு
குரல் கொடுத்தாய் ! வேற்றுமைக்கு கையசைத்தாய் !

மூன்றாம் உலகப் போரினை முறியடித்தாய் !
நடுவு நிலைமை நாடுகளை உருவாக்கினாய் !
கூட்டுச் சேராக் கொள்கையிலே குரல்கொடுத்தாய் !
அணுவால் அழியும் அகிலத்தைக் காத்தாய் !

அத்தனையும் போதா தென்றாநீ ! துப்பாக்கிச்
சத்தத்தில் சிக்கி தீப்பொறி ஆனாய் !
அரண்மனைத் தோட்டத்து ரோஜாவே !
நின்றன் காஷ்மீரக் கதிர்ப் பூக்கள்
காலமெலாம் கதைபேசும்.

எத்தனையோ திட்டங்கள்
இதயத்தில் ஏந்தினாய்
என்றா ! இத்தனை
குண்டுகள் துளைத்தன !
இந்தஇதயமிலா மனிதரை
ஏனோநீ காணவில்லை !

ஏற்றமிகு தோற்றத்தால் !
எடுப்பான சொல்லால் !
போற்றுகின்ற பண்பால் !
பொலிவான உடையால் !
புன்னகைப் பூக்களை !
பூக்கும் நீ !
அதிகாரம் ஆதிக்கம் செய்யும் போதே !
அங்கங்கே சிதறும் செந்நிறத் துளிகள் !
இங்கேயும் சிதறும் என்பதை மறந்தாயே !

எத்தனை இந்திரா உன்னால் இங்கே !
இனியெங்கே ஜவகரின் இந்திரா இங்கே !
கவிக்குலத்து மேதைநீ !
காவியத்தின் சீதைநீ !
காரிகையாய் வந்ததொரு கீதைநீ !

இனியும் இதயங்கள் வெடிப்பதால்
இந்திராவின் இந்தியா வடிக்கப் படுவதில்லை !
கலங்காத நெஞ்சம், எங்கும்
காற்றாக இயங்கும் என்றா ?
காவலனே கலைத்தான்
நின்னுயிர்க் கூட்டை !
கூடுதான் கலைந்தது !
கொள்கைகள் நிலைக்கும் !
இனிவரும் இந்தியா
நின்பூக்களைச் சூடும் !

கதறாத நின்னைக் கதற வைத்தார் !
காவலரா அவர் ? இல்லை ! இல்லை !
காரிகைநீ சிந்திய ரத்தம் ஒவ்வொரு
துளியும் நின் புகழ் பேசும் !
ஒற்றுமைப் பூக்களே இந்தியா !
இல்லை ! இல்லை ! இந்திரா !
==================================
ஒலி வடிவத்தினைக் கேட்க :



--------------------------------------------------

Sunday, July 6, 2008

மயிலுக்குக் குளிருமா ?

இக்கதை வல்லிம்மாவின் இரண்டு வயது பேத்திக்காக எழுதியது.
------------------------------------------------------------------------------------
ஒரு காடு - கண்ணெ மூடிக்கோ - பிள்ளையார் சாமி கும்பிட்டுக்கோ - அப்பதான் கத வரும் - இப்ப கண்ணேத் தொறந்துகிட்டு கத கேளு.

அந்தக் காட்டிலெ ஒரு மல - அந்த மலயிலெ நெரெய மரம், நெரெய செடி - அங்கே மான், கொரங்கு, எல்லாம் ஓடி விளையாண்டுட்டு இருக்கும் - மரத்துலே பாத்தா இருட்டாத் தெரியும் - நெரெய குயில் கூட்டமா இருக்கும் - வெயில் வரப்போ இடமே இல்லாம காத்து அடிக்கும் போது - அந்த இலைக்கு நடுவுலே லைட் மாதிரி வெயிலு ஒரு கோடாட்டம் வெள்ளிச் சரிகை மாதிரி வரும்.

இந்தக் காட்டிலே - ஒரு பெரிய ராசா இருந்தாரு. அவரு வேட்டைக்குப் போவாரு - அவர் கூட துணைக்கு ஆளுக எல்லாம் போவாங்க ! ஒரு நா ராசா காட்டுலே வேட்டையாடி முடிச்சிட்டு - ரொம்பக் களைப்பா ஒரு மரத்தடியில தங்குனாரு.

அப்ப மழை வர மாதிரி காத்தடிச்சுது - மேகமெல்லாம் கருப்பாயிடிச்சி - இருட்டாப் போற மாதிரி குளிர் வேற இருந்திச்சி . அந்தக் காட்டுலே நெரெய மயிலு இருந்துச்சு - நீல மயில் வெள்ள மயிலுன்னு பல வண்ண மயிலுக இருந்திச்சி. அதுலே ஒரு பெரிய மயிலுக்கு குளிர் தாங்கலே ! - நடுங்கிகிட்டே தோகையே வேற விரிச்சிக்கிச்சி.

ராசா பாத்தாரு - பாவம் அந்த மயிலு - ரொம்பக் குளிருதே - இது என்ன செய்யும் - வயசான மயிலாச்சே - அப்படின்னு யோசிச்சுக்கிட்டே எழுந்து நடந்து போனாரு - அவரு தோளிலே போட்டிருந்த சரிகைத் துண்டே எடுத்தாரு - ராசால்ல - அது நல்ல பெரிய பளபளன்னு இருந்த பட்டு சால்வை - அது சும்மா மின்னிக்கிட்டு இருந்திச்சி - அத எடுத்து குளிர்லே நடுங்கற மயிலுக்கு இதமா போத்தி விட்டாரு - பாத்தியா - மயிலுக்கு பட்டுப் போர்வை கொடுத்த ராசாவெ !

நாமளும் யாருக்காச்சும் குளிர் எடுத்தா - நம்ம கிட்டே இருக்கற போர்வையெக் கொடுத்து உதவனும் - தெரிஞ்சுதா - ராசா தான் பெரிய ஆளுல்லே ! அவரு ஏன் நடந்து போய் போர்வை போத்தனும் ? யாரங்கே ? அந்த நடுங்கும் மயிலிற்கு ஒரு போர்வை போர்த்தி குளிரிலிருந்து மயிலைக் காத்திடுக ! அப்படின்னு கட்டளை இட்டிருக்கலாமில்லே ! - ஆனா அவரு உடனே போயி அவரே போத்தி விட்டாருல்ல - மயிலக் காப்பாத்தினாருல்ல - அது போல உதவி செய்யனும்னா நாமே செய்யனும் - அடுத்தவங்களே செய்யச் சொன்னா - அது வேற மாதிரிப் போயிரும்.

நல்ல புள்ளையா வளரனும் - நல்லவங்களோட பழகனும் - நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கனும் - அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்றதக் கேட்டு நல்லவளா வளரனும் - சரியா !!!

உனக்கு ஒண்ணு தெரியுமா - எங்க பேத்தி சாமி கும்பிடும்போது - அப்பா. அம்மா, தாத்தா, பாட்டி, பாப்பா சொல்ற பேச்சக் கேக்கனும்னு சொல்லுவா. ஏன்னா - பாப்பா சொன்னா யாரு கேப்பா - அதனாலே நான் கேக்கறென்னு சொல்லுவா .

ம்ம்ம்ம் சரியா - வரட்டா

செல்வி ஷங்கர் - 06072008




Wednesday, July 2, 2008

செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் பற்றிய ஒரு பதிவு

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு. இது இயற்கை. விதைத்த விதை முளைப்பதும், முளைத்த செடி வளர்வதும், வளர்ந்த மரம் காய்ப்பதும், காய் கனியாவதும், கனி மீண்டும் விதையாவதும் அடுத்தடுத்த விளைவுகளே !

விடாமுயற்சியோடு செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் பட்டறிவு. எதிர்த்துப் போராடும் போராட்டக் குணமும், அடக்கி ஆள்கின்ற ஆதிக்க மனமும், வளர்ச்சி காண ஆள்கின்ற அரசும், செயல்களின் சேர்க்கையால் பெற்ற பெரும்பயனே !

தவமென்றால் காட்டிற்குச் சென்று கண்ணை மூடிக்கொண்டு செய்வதல்ல. மனத்தால் அக வாழ்வைத் துறந்து புறத்தால் புற வாழ்வை மேற்கொண்டு துன்பப்படுபவரின் துயர் துடைப்பதே தவம். இது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழி. எப்படித்தான் அவரால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்ததோ ! அறிந்த வரையில் சமுதாயத்தின் ஒரு சாமானியனாய் இருந்திருந்து, சர்வாதிகார அரசுக்கெல்லாம், சமுதாயத்திற்கெல்லாம் எப்படித்தான் சட்டத்தை வகுத்தானோ !

இயலாமையைக் காரணம் காட்டி இவ்வுலகில் எதையுமே செய்யாமல் எத்தித் திரிகின்ற மனப்பான்மை உள்ள மக்களிடையே, சிறிதும் இயலாதவர்கள் கூட பிறருக்கு கை கொடுக்க நினைக்கின்ற எண்ணம் மிகவும் உயர்ந்தது. அது எல்லோராலும் முடிந்ததன்று. இதைச் சொல்கின்ற போது கண்ணதாசனின் சில கருத்துகள் என் நினைவிற்கு வருகின்றன. செருப்பு இல்லை என்பவன் காலில்லாதவன் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறி தன் யதார்த்த வாழ்க்கையையே அர்த்தமுள்ள இந்து மதமாக்கிக் காட்டியது கூட ஒரு வகையில் தவம்தான்.

எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர் - விடாமுயற்சியோடு செயல்படுபவர். இவ்வுலகில் செயல்களைச் செய்யக் கூடியவன் மறு உலகிலும் அதன் பயனைப் பெறுவான். அதுவே தவம். அதனால் தான் அத்தகைய செயல்கள் இங்கும் செய்யப் படுகின்றன. நம் ஒவ்வொரு செயலும் நம் மறுமைக்கு வழி காட்டுவதாய் இருத்தல் வேண்டுமென்பது தான் அனைத்து வேதங்களின் சாரம்.

தன்னுடைய செயல்களைத் தானே செய்துகொள்ள முடியாத நிலையிலும், நான் ஒன்றைச் செய்வேன்; செய்வதன் மூலம் பயன்பெறுவேன்; பெற்ற பயனைப் பிறருக்குக் கொடுப்பேன்; அதுவும் என் போன்று இயலாதவற்கு ஏழ்மையைப் போக்க உதவுவேன் என்கின்ற இந்த நூற்றாண்டுக் கர்ணன் அந்தோணி முத்து செய்தவம் ஈண்டு முயலப்படும் என்றால் செய்தே முடித்துக்காட்டுவான். அவனின் செயல்பாடுகள் இணையத்தில் எல்லோரூம் அறிந்தது தானே ! அப்படி என்றால் இயலாதவர்க்கு மட்டும் தான் முயற்சி என்பதல்ல. அனைவருமே விடா முயற்சியோடு செயல்பட்டு செயல்பயனைப் பெற வேண்டும் என்பது தான் செய்தவத்தின் பொருள். இங்கே செய்தால் அங்கே கணக்கில் கொள்ளப்படும் ! இது எந்தக் கணக்கியல் தத்துவத்திலும் இவ்வுலகில் அடங்காது.

செல்வி ஷங்கர் - 02.07.2008



Friday, June 27, 2008

வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை - 25.06.2008

அன்பின் சக பதிவர்களே !!
தோழி நானானி மதுரை வருவதாக எங்க வீட்டு ரங்க்ஸ் சொன்னாங்க. நானும் உடனே கட்டாயம் சந்திக்க வேண்டுமெனக் கூறினேன். சென்ற முறை ரங்க்ஸ் மட்டும் சென்று, திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறினார். பதிவு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. இம்முறை நானும் சந்திக்க வேண்டுமெனக் கூறியதால் 25ம் தேதி காலை சென்று பேசிவிட்டு வந்து, அன்று மாலை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தார். நானானியுடன் அவரது கணவரும் வந்திருந்தார்.

இச்சந்திப்பு பற்றிய எனது எண்ணங்கள் :

இந்தக்காலத்துச் சின்னப் பசங்க எல்லாம் பேசிப்பாங்கள்ள ! எங்க வூட்டுக்கு, "கெஸ்ட்" வந்துருக்காங்கன்னு - யாருன்னா "அத்தே!" ம்பாங்க. இப்போ அத்தைங்கற உறவெல்லாம் "கெஸ்ட்" ங்குற நிலைக்குப் போயிடிச்சி. அப்படித்தாங்க நாலு பேரு சந்திச்சாங்க மதுரயிலே ! அவங்க யாருன்னா - நானு, நானானி, எங்க வூட்டுக்காரரு, அவங்க வூட்டுக்காரரு ஆக நாலு பேர்.

பிள்ளைகள் சந்தித்தால் :
உனக்கு எப்போ ஸ்கூல் இல்ல காலேஜ் ?
நீ எப்ப டூர் போன ?
உனக்கு எந்த ஸ்டாரெப் பிடிக்கும் ?
யாரோட "சாங்க்" ரொம்ப இன்டெரெஸ்ட் ? ன்னு பேசுவாங்க.
ரொம்பச் சின்னவங்களா இருந்தா ஒருத்தரோட ஒருத்தர் விளையாடுவாங்க.

இளம் வயதினர் சந்தித்தால் :
தங்கள் கனவுகளைப் பேசுவார்கள் / காண்பார்கள்.

நடுத்தர் வயதினர் சந்தித்தால் :
குடும்பத்தை, குழந்தைகளை, செய்தொழிலைப் பற்றிப் பேசுவார்கள்.

பெரியவர்கள் சந்தித்தால் வாழ்க்கை பற்றிப் பேசுவார்கள்.

"நானானி" என்ற பெயரை நான் வலையில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுத்துகளைப் படித்த போது மேலோட்டமாக ஒரு எண்ணம் மிகுந்தது. நேரிடையாகப் பார்த்த போது மதிப்பு மிக்க ஒரு தோற்றம், அமைதிப் பொலிவு, இயல்பான சொற்கள் - இதழ் உதிர்த்த போது. இலக்கியம் கற்ற ஆற்றல் - இயற்கையை, சூழ்நிலையை, குடும்பத்தை, பிள்ளைகளை, பணியை, பாசத்தை பகிர்ந்து கொண்ட உரையாடல்.

அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு தட்டப்பட்டதும், சிறிது நேர இடைவெளிக்குப் பின் கதவு திறந்தது. கண்களில் மகிழ்ச்சி - இதழ்களில் புன்னகை - அமைதித் தோற்றம் அளித்த நானானி எங்களை அன்புடன் வரவேற்றார்.அந்த நேரம் அவரது கணவர் நட்பினைப் பார்க்கச் சென்றிருந்தார்.

என்ன படித்தோம் - எங்கே படித்தோம் - எப்படிப் பணியாற்றினோம் - எவ்வளவு காலம் சென்னையில் வாழ்ந்தோம் - பிள்ளைகள் வளர்ந்து, படித்து பறவையாய்ப் பறந்தது வரை பேசினோம். பேரப் பிள்ளைகள் பேசி விளையாடுவது - அவர்களின் சூழ்நிலை எல்லாம் நினைவில் நின்றது.

வலைப்பதிவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியா விட்டாலும், அகமகிழ்ந்து பேசிக் கொள்வதைக் கூறி மகிழ்ந்தோம். பதிவர்களின் பதிவுகள் / பின்னூட்டங்கள் படித்தால் ஒரு அமைதி கிடைக்கிறது. எத்தனையோ வேலைகளுக்கிடையில், இரவு எவ்வளவு நேரமானாலும், அந்த வலைப் பூவினைப் படிக்கையில், உரையாடும் அன்பு வலை ஒரு உற்சாக ஊக்கி என்று பேசி மகிழ்ந்தோம்.

நட்பினைக் கண்டு வந்த நானானியின் கணவரும் எங்களுடன் உரையாடி மகிழ்ந்தார். நாடு - அரசு - அலுவல் - அயல்நாடுகள் என்று கருத்து வட்டம் விரிந்து பறந்து சென்று வலைக்குள் புகுந்தது. ஒரு நல்ல மாலைப் பொழுது இனிமையாய்ப் பறந்தது.

பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
எதிர்காலம் எப்படி என்ற சிந்தனையுடன்
மாநாடு கலைந்தது.

செல்வி ஷங்கர்
------------------

நான் எனதருமைத் தோழி நானானியை அவரது எண்ணங்களை ஒரு பதிவாகப் போட வேண்டுகிறேன்.
செ ஷ
---------









Thursday, February 21, 2008

பாப்பா ! பாப்பா !

காற்றடித்தால் சிரிக்கும் !
கைபட்டால் சிரிக்கும் !
சேர்த்தணைத்தால் சிரிக்கும்!
சிங்காரப் பாப்பா!!

தொட்டாலும் சிவக்கும்!
தேன்சிட்டாகப் பறக்கும்!
கண்பட்டால் கலங்கும்!
பண்கேட்டால் தூங்கும்!

பஞ்சாகப் பறக்கும்!
நெஞ்சம் குலுங்க
அஞ்சாது பார்க்கும்!
அதற்கென்ன தெரியும் ?
அம்மாவின் தவிப்பு!

Friday, February 8, 2008

திருவிழாவுக்குப் போவோமா !!!

மதுரை தெப்பத்திருவிழா !!
--------------------------------

சின்னங்சிறு வயதில் செல்லாமலே இருந்து விட்ட திரு விழாக்கள்! இள வயதில் செல்வதற்கே நேரமில்லாத திருவிழாக்கள்! பார்க்க வேண்டும் எனறு மனதில் நினைத்த போது "வா போகலாம்" எனற வாய்ப்பு!!

சாலையில் நடக்கும் போதெ நாற்புறமும் நடமாடும் பார்வை. பார்த்தவுடன் மனத்தில் பரவும் பரவசம். கிடைக்காமல் போன கிளர்ச்சி கிடைத்து விட்டதாய் மனம் குதிக்கின்ற குதிப்பு!

இதுவரை பார்க்காத பலூன்களா ? அதைத் தொட்டுப் பார்க்கத் தூண்டிய மனம். கட்டுக் கட்டாய், காடே வந்தது போல் அடுக்கி வைக்கப்பட்ட கரும்புகள். வெட்டிக் கொடுக்கின்ற வளைக் கரங்கள். அருகில் காசைக் கணக்குப் பார்க்கின்ற அவன்!

நிமிர்ந்து பார்த்தால் கண்கள் மலர்கின்ற மத்தாப்பூப்போல் வானத்தில் வெடிக்கின்ற வாண வேடிக்கை. கூட்டமாய்ச் செல்லுகின்ற குடும்பங்கள், குழந்தைகள், நட்பு வட்டங்கள், வயதைக் கடந்த வாழ்க்கையினர்!

ஓடுகின்ற சின்னஞ் சிறுவர்கள். கால்களை எட்டி நடை போடுகின்ற இளவயதினர்! இவர்களுக்கிடையே கண்ணில் கண்ணாடி, கரங்களைப் பற்றிய கைகள், நடப்பதற்கு மூச்சு வாங்கும் உடலை உள்ளம் ஓடு ஓடு என இசைத்துச் செல்ல, சுற்றிலும் மக்கள் கூட்டம். காவலர் நடமாட்டம். கால் வைக்க இடமில்லை. கடல் போல் சாலை. தடுத்து நிறுத்தப்பட்ட போக்குவரத்து. தெப்பத்தைச் சுற்றி மின்னொளி ! அலை அலையாய் நீர்ப் பெருக்கு குளத்தில் ! கரையோரக் கற்சுவரில் கோடு கிழித்தாற்போல் மக்கள் கூட்டம்.

யானை! இத்தனை காலங்களாயினும் மக்களுக்கு அது வியப்பு தான்! மக்கள் வெள்ளத்துக்கிடையே மலை போன்ற யானை ! சுற்றிலும் கேமரா ஒளி ! ஆம், அங்கே வெளி நாட்டார்! எல்லாமே விந்தையாய் இருந்தது அவர்களுக்கு! தெருவோரக் கடைகள்! கூடையில் கூவும் முறுக்குகள்! கொரிப்பதற்கு பொரியும் பொரி கடலையும் கண்ணாடிக் கூண்டுக்குள்! காலம் மாறி விட்ட கதை சொல்லும் பழக்கூடுக் கிண்ணங்கள் ! ஆம், வெட்டி வைக்கப்பட்ட கலவைப் பழங்கள்! இன்னும் ஆசை. கையில் எச்சி மிட்டாய் கடிகாரம் கட்ட இளைஞர்களுக்கு! மருத்துவத்தின் வளர்ச்சி! அவித்த பருப்பு வகைகள்! ஈச்சங்கிழங்கு; காலம் மாறினாலும் இன்னும் மாறாத பலகார வண்டி கண்ணாடிக் கதவுகளுடன்! சுற்றுகின்ற ராட்டினம்
விதம் விதமாய் !

அங்கங்கே கூட்டம் கூட்டமாய் குடும்பங்கள்! பக்கத்து வீட்டு நட்புடன், கையில் பையுடன், தலையில் தலைப்பாகை, வேட்டிகள் நிறைந்து நடமாட, காலத்தின் நாகரீக வளர்ச்சி கண்ணில் பட, ஜீன்ஸ், சுடிதார்
நடைபோட, இடையே வாரி முடித்த கொண்டையுடன் இடைக் கொசுவமிட்ட சேலைக் கட்டும், தலையிலே மதுரைக்கே உரிய மல்லியும் மணக்க, எல்லோர் நெற்றியிலும் திருநீறு ஒளீ வீசி குங்குமம் எட்டிப் பார்க்கும்.

நான்கு கரைகளிலும் மண் அகல் விளக்குகள் ஒளி வீச, படிக்கட்டுகள் புனிதமாய் காட்சி அளித்தன! நடுவே தெப்ப மண்டபம், ஒளி விளக்கால், கோபுரம் நான்கும் தெய்வீக ஒளி வீசியது. நடுவில் மூங்கில் தெப்பம் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு, அன்னை மீனாள் அருமைச் சொக்கரோடு தோன்ற, பூந்தெப்பமாய் மின்னொளியில் மிதந்தது. தேரின் வடக் கயிற்றைப் போல, இரு மடங்கு பெரிய கயிற்றால் தெப்பம் இழுக்கப் பட்டது. மக்கள் கூட்டம் வெள்ளமாய் அலை மோதியது. நேரம் செல்லச் செல்ல, பாலமோ பாதையோ கண்ணுக்குத் தெரியாதோ என எண்ணும் அளவுக்கு கூட்டம். மக்கள் அலை.

எல்லாம் சரிதான்! திருவிழாவிற்குச் சென்ற நாம் தெய்வத்தைப் பார்க்க வேண்டாமா ! கையெடுத்து, கடல் அலையாம் கூட்டத்தையே கும்பிட்டு, மனத்தில் மானசீகமாய், இறைவனையும் இறைவியையும் வணங்கி, வழி தேடி, வந்து கொண்டிருந்தோம். தெப்பம் அசைந்தாடும் இறையழகைக் கண்டு, அருள் பெற அலை அலையாய் மக்கள் கூட்டம் அசைந்தது. இச்சூழல் எல்லாம் கண்ட கண்கள் இறைவன் இறைவி தெப்பத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தை, மறு நாள் செய்தித் தாள்களில் தான் கண்டன.

எப்படி தெப்பத் திருவிழா !

திருவிழாவிற்குச் செல்ல தேகத்திலும் வலிமை வேண்டுமல்லவா ! கண்கள் உள்ளபோதே காட்சியை(கடவுளை)க் கண்டு விட வேண்டும். பின்னர் மனக்கண்ணிலே தான் காண முடியும் கண் தந்த கடவுளை!

காண்போமா திருவிழா!!!!

Sunday, January 27, 2008

எப்போது கற்போம் ??

பூக்களில் உறங்கும் மௌனம் ! எங்கும்
பார்க்காமலே செல்கின்ற உறவு ! இங்கு
ஏக்கங்களை வெளியிடும் பெருமூச்சு !
சின்னஞ்சிறு விரல்களின் உழைப்பு !
மொட்டுக்கள் வெடிக்காமல் மடியும்
உரிமை மறுத்து மடியும் புவியியல்!
வளர்ச்சியும் மகிழ்ச்சியும் மறுத்து
மண்ணில் நடக்கும் மனம்!
வெள்ளம் அடித்துச் சென்ற வாழ்வு
புயல் வீசிச் சென்ற பூங்கா
நிலம் அதிர்ந்து வீழ்ந்த மக்கள்
பெருமழை பேயாய்ப் பொழிந்த காலம்
வரும் வருமெனக் காத்திருந்து
வாராத கரையோரக் கனவுகள்
எல்லாம் எங்கே பேசின நம்மோடு ?
ஓடங்கள் ஓடிய ஓரங்களில் உள்ளம்
ஓய்வாகப் பார்க்கும் பார்வை! எல்லாமே
பூக்களில் உறங்கும் மௌனம் தானே!
உள்ளம் எப்போது கற்கும் அம்மொழியை ?