Saturday, December 22, 2007

பூக்களில் உறங்கும் மவுனம்.

என் பாக்களில் காணும் ஏக்கம்!
உன் எண்ணங்களால் வந்த தாக்கம்!
சுற்றி உள்ளவர்களைப் பார்த்தேன் ஆம்!
சுவர்போல் உணர்ந்தேன் அவர் பார்வையை!

மாறாதது உலகம் என்றார்கள்! இல்லை!
மாற்ற முடியாது இந்த மனிதர்களை!
சொல்வது போல் செய்ய வில்லையே!
சுயநலந்தான் சுற்றிச் சுற்றி வருகிறதே!

காசு கொடுத்தால் கூட கனிவாகப்பேச
காலநேரம் பார்ப்பர்! சொற்கள் சுடுகின்றனவே!
என்ன வந்து விடப் போகிறது!
இவர்களின் இன் முகப் பார்வையில்!

புரிய வில்லையே! இந்த புதிர்போடும்
மனிதர்க்கு! புன்னகைப் பூக்களைப் பூத்தாலென்ன!
புவி என்ன சாய்ந்தா போகும்!
அன்பாகச் செய்தால் அது பண்புதானே!

ஆலயம் சென்றா அறத்தைச் செய்யவேண்டும்!
மனமே மாபெரும் கோவில்! அங்கே
மாண்புறு எண்ணங்களே ஒளி விளக்கு!
மாறாத நினைவுகளே மாண்புடையான் வழிபாடு!

மாபெரும் உலகத்தை மண்ணில் வாழவிடுவோம்!
மாந்தருக்குள் அன்பு செய்வோம்! இங்கே
மழலையரை மாந்தர்களாய் ஆக்குவோம்! இனி
பூக்களில் உறங்கும் மவுனங்கள் போதும்!

புதுமலராய் புன்னகைப்போம்! புவிவாழ பூங்கா
வனம் அமைப்போம்! புதுமணம் பரவட்டும்!
பூக்கள் மலரட்டும்! பாக்கள் பேசட்டும்!
அதில் ஆக்குவோம் அன்பு வலையை!

செல்விஷங்கர்
22.12.2007

Wednesday, December 5, 2007

உலகம் இவ்வளவு தான்

காலம் கடந்த பின் தான் அதன் அருமை புரியும். நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் ஓடிய காலங்களை இப்பொழுது நம் மனத் திரையில் கொண்டு வந்தால் அது நம்மைப் பார்த்து நகைக்கும். என்ன ஓய்வா ? என்று! சுற்றிச் சுற்றி சுழன்ற கால்கள் இன்று சுகமாக நடைபோடுகின்றன. அது எப்படி வந்தது இந்த மன நிறைவு! சுற்றும் உலகம் ஒரு நொடி நின்றால் தெரியும் !

புத்தன் கூட ஆசைப்பட்டானாம். உயிர்கள் துன்பப்படக் கூடாதென்று!
ஆசையைத் துறப்பதற்கு மனம் எளிதில் துணியாது. பற்றினை விடுவதற்கு பற்றற்றவனின் பாதங்களைப் பற்றுக என்கிறான் வான்மறை புலவனும். ஆசைகள் எப்படி நம்மை விட்டு அகல்கின்றன? அலை மோதும் நீரின் சுழற்சி போல் நம் எண்ண அலைகள் கரை மோதுகின்றன.

நினைத்துப் பார்த்தால் உலகம் இவ்வளவுதான். அதில் ஏன் இத்தனை மோதல்கள்? இயற்கையை வளர மறுக்கும் சூழல்கள் ! ஏழை வாழ்ந்தால் என்ன? எதற்காக அவன் வசதிகளை வாய்ப்புள்ளோர் சுரண்ட வேண்டும்?

நடக்கும் தொழில் ஊழல் ஏன்? அது நடந்தால் என்ன? நாடு நலம் பெற வேண்டாமா? ஏன் திட்டங்கள் செயல்களாக மறுக்கின்றன! மறைக்கின்ற மனிதர்கள் மனந் திருந்துவார்களா? கொதிக்கின்றனர் குறைபாடுடை யவர்கள். அந்த ஏழைகளின் வாழ்வு மலர வேண்டாமா? ஏற்றமுடையோர் இயல்பாகச் செயல் பட்டால் என்ன ? அந்தச் செம்மையுடை யோருக்காகத் தானே இந்த உலகம் இத்தனையும் தாங்கிக் கொண்டிருக்கிறது! எதிர்த்து ஒரு வார்த்தை கேட்பதில்லை! இதைப் புரிந்து கொண்டாவது நாம் செயல் படக் கூடாதா?

நலிந்தோரை நலமாக நடமாட விடுவோம்!
நாட்டின் பயன்கள் அவர்களைச் சென்றடையட்டும் !

வளமான நாடு உருவாகட்டும்!!!!

Saturday, November 3, 2007

காலம்

நம்மைக் கடந்து கொண்டே இருப்பது !
சில நேரம் நாம் அதைக் கடப்பது !
சுற்றுகின்ற முட்களுக்கு கடிகாரம் சிறை !
கடக்கின்ற நாட்களுக்கு இளமை சிறை !
கண்ணை மூடிக்கொண்டாலும் காலம் சுழலும் !
நம்மை இயக்கிக் கொண்டே ஞாலம் மாறும் !
எண்ணங்கள் எல்லாம் இறந்த காலங்களே !
எண்ணி முடிப்பதற்குள் அவை நம்மை கடக்கும் !
எதிர்காலம் எப்படியும் நம்மை நோக்கி நகரும் !
நிகழ்காலம் தான் நம் நினைவின் இலக்கு !
அதை நாம் நிறைவேற்றினால் மனச்சுமை குறையும் !
காலத்தால் அழியாத காவியங்கள் இயற்கை !
இன்னும் இளைஞர்களுக்கு அவை ஒரு சுவை !
கடற்கரை என்றைக்கும் மனச் சிறை தான் !
மலைச் சாரல் மகிழ்வின் ஊற்றே மனத்திற்கு !
காடுகள் நம் உள்ள ஏடுகளைப் புரட்டும் !
கனலும் நெருப்பும் காலத்தின் கைகள் !
பொழிகின்ற மழை விழிகளில் இறங்கும் திரை !
எந்தக் கவிஞனின் மனத் திரையிலும் மயிலாடும் !
செவியினில் இன்குயில் பாடும் ! எல்லாம்
இயற்கையின் கோலம் ! புள்ளி வைக்காமலேயே
புதிர் போடும் கோலங்கள் ! காலத்தின் சுவடுகள் !

Thursday, October 18, 2007

இது புதுமை!

சித்திரங்கள் சிரித்தன!
சின்ன விரல்கள்
சிந்திய வண்ணங்கள்!
பூப்போல் எடுத்து
புன்னகையால் அணைக்க
புரியாத மொழியில்
மலர்ந்தன மின்விழிகள்!
கொஞ்சும் மழலையரின்
பஞ்சு விரல்கள்
பார்வைக்குள் பனித்தன!
பாசமென்ற கைகளுக்குள்
பனிமலராய்ப் பூத்தன!
இது புதுமை! இது புதுமை!

எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் !
பார்வை மொழியில் பனி மலரும் !
பிஞ்சு விரல்கள் அசைந்து
காலடியில் இசை பாட சுவைக்கும் !
கண்ணுக்குள் நிற்கும் கவிதை !
என்னுள் குதிக்கும் இனிமை !
இந்த மழலையரின் சொல்லுக்கு
மயங்கும் சுவைத் தேன் நான் !
சுட்டிப் பிள்ளைகள் எட்டிப்
பார்க்கும் திரை என் மனத் திரை !
மனத்திற்கு மகிழ்வூட்டும் மான்கள்
என் கண்ணின் மணிகள் !

எனக்கொன்றும் புரியவில்லை

அதென்ன அப்பா என்றால்

செய்தித்தாள் படிப்பார்!

அம்மா எப்பொழுதும்

அடுக்களையில்! சமைப்பார்!

எது நடந்தாலும் ஏன் ?

எப்படி அது அவளுக்குத்

தெரியாமல் போனது ?

இது கூடத் தெரியாவிட்டால்

இவள் என்ன பெண் ?

இசைக்கின்ற வானொலி செவியில்

பிள்ளைகளின் சீருடை

மடித்து வைத்த காலுறை

அடுக்கி வைத்த புத்தகம்

அடுத்த நாள் செய்ய வேண்டிய

இன்றைய வீட்டு வேலை!

அலுவலகம் செல்ல அமைதியாய்

இருக்கும் கைப்பை !

கட்டும் போது மடிப்பில்

தெரியும் காப்பிக் கரை!

எப்பொழுது மூச்சு விடுவாள் இவள்!

இத்தனைக்குப் பின்னும்

இவளுக்கு என்ன தெரியும்

ஏதாவது புரியுமா? இது வேத வாக்கு!

இருந்தாலும் அவள்தான் இங்கே உலகம்!

Wednesday, October 10, 2007

என் மொழி - 2 !!

சிந்தனைப் பூக்களின் தொடர்ச்சி :

---------------------------------------------------


பேசாமல் பேசும் வித்தையைக் கற்றுக் கொள் !


வள்ளுவத்தைப் படித்தால் வாழ்க்கை மேம்படும் !


வானவில்லை வளைக்க முடியாது.
ஆனால் வாழ்வை வானளவு உயர்த்தலாம் !


என்ன மனிதர்கள் இவர்கள் - எண்ணத்தால் தாழ்ந்தவர்கள் ?


எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கை வட்டப்பாதை
தான் ! ஏன் வழி தடுமாற வேண்டும் ?


சொன்னால் சிரிக்கின்ற செயல்களை எல்லாம் மனிதன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.


எண்ணத்தால் தாழ்ந்த மனிதர்கள் எளிதில் எதிர்படுவதில்லை.


பூட்டி வைத்ததிலும் திறக்க முடியாத எண்ணங்கள் மனக்கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கும்.


காற்றில் பறக்கவும், கடலில் மிதக்கவும், நிலத்தில் தாவவும், நெருப்பில் நிற்கவும் நீ என்ன தமிழா ? நினைவுகளைப் புடம் போட்டுக்கொள்; புத்துலகுக்கே சென்று வரலாம் !


காற்றடித்தால் பறப்பது குப்பைகள் மட்டுமல்ல !
கலைந்த எண்ணங்களும் தான் !


ஏற்றி விடுவதற்கு ஒருவர் இருந்தால் இறங்குவதற்குக் கூட துணை தேடுவோம் !


---------------------------------------------------------

சிந்தனைப் பூக்கள் இன்னும் பூக்கும் !

---------------------------------------------------------

Sunday, October 7, 2007

என் மொழி - 1 !!!

நீங்கள் நீங்களாக இருங்கள் !
வேறு யாராகவும் இருக்க வேண்டாம் !

ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையே
இடைவெளி குறைந்தால் உண்மை போய்விடும்.

உரிமை அதிகமாக அதிகமாக ஒழுங்கு கெட்டுவிடும்.

அமைதி ஆயிரம் எண்ணங்களைத் தரும்.

சொல்லில் தடுமாற்றம் இருக்கிறதென்றால் கருத்தில்
முரண்பாடு உள்ளதென்று பொருள்.

கேட்டுப் பெறுவது சிறப்பல்ல-
கேட்காமலே வருவது உயர்வு !

செயல்களைச் செய்யாமல் இருப்பது இயல்பன்று !

எல்லோரும் உன் கருத்தை ஏறகவேண்டும் என எதிர்பார்க்காதே !

அடுத்தவர் கருத்தை எதிர்க்காதே !

காசும் பணமும் காலங் கடந்து வருவதால் பயனில்லை !

அன்பைக் கேட்டுப் பெற முடியாது - கொடுத்துப் பெறலாம்.

பாசம் விலை பேசப்படக்கூடாது !

நமக்காகத்தான் பொருள் - பொருளுக்காக நாமில்லை !

உண்மை உள்ளத்தில் இருக்க வேண்டும் ! உதட்டில் அல்ல !

இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லை!

எல்லாச் செயலுக்கும் ஒரே முயற்சிதான் -
ஏன் வன்சொல் பேச வேண்டும் !

அன்பு எதையும் கேட்பதில்லை !

உண்மை நம்மை உயர்த்துவது !

விளையாட்டிற்குக் கூட பொய் பேசாதெ !

எல்லாவற்றையும் கேட்டுக்கொள் !
எப்போதாவது பேசு !

எதற்கெடுத்தாலும் காரணம் தேடாதே !

எதையும் தள்ளிப் போடாதே ! இயல்பாய் இரு !

எப்படிப் பார்த்தாலும் இங்கே மக்கள் - வேறுபட்டவர்கள்தான் !
உடன்பாடு என்பது உள்ளத்தில் வரவேண்டும் !
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் இன்று என்ன
செய்து கொண்டிருக்கிறோம் ?

நினைத்தது நினைத்தபோதில் கிடைத்தால் அது சொர்க்கம் !
தேவை இல்லாத போது தேவாமிர்தமே கிடைத்தாலும் பயனில்லை !

முரண்பாடு உடையது உலகம் !
உடன்பாடு ஏற்படுவது அரிது !
உழல்வது தான் எளிது !

காலங்கள் கடந்து கொண்டு தான் இருக்கும் !
நாம் நடந்து கொண்டிருக்கும் போது !
நற்பெயர் எடுப்பது என்பது எல்லோராலும்
முடியாது ! அது ஒரு சிலருக்கே வாய்க்கும் !

வாழ்க்கை என்பது வசம் தான் [வசந்தம்]
நாம் வாழ்ந்து பார்த்தால் !

எப்பொழுதுமே கடந்த காலங்கள் மேன்மையாய்
இருக்கின்றன ; நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில்
கொள்பவர்களுக்கு !

வருவதும் போவதும் தானே வாழ்க்கை !

ஊமை நெஞ்சங்கள் உறங்குவதில்லை !

செல்வி ஷங்கர்

அமைதி

ஆண்டவன் சந்நிதியில் கிடைப்பது !
அருந்தமிழின் சுவையில் திளைப்பது !
ஆற்றலின் விளிம்பில் அலை பாய்வது !
ஆசையை நினைத்து அன்பில் நிலைப்பது !
இருப்பதைக் கொடுத்து இன்முகம் காண்பது !
துயரத்தைப் போக்கி துன்பம் துடைப்பது !
மழலையின் சிரிப்பில் மடியில் காண்பது !
இன்னிசையின் மென்மையில் சுவைப்பது !
இலக்கியத்தின் இதழ்களில் மலர்வது !
நெடுந்தூரப் பயணத்தின் நிம்மதியில்
உணர்வது ! அடுத்தவ்ரின் அன்புச்
சிரிப்பில் சிந்துவது ! ஆக்கத்தின்
வளர்ச்சியில் வாழ்வது ! அமைதி !

சமுதாயம்

எதைச் செய்தாலும் குற்றம் சொல்லும் !
எப்படிக் குறை களைவது !
தன்னலச் சேற்றில் சதிராடும் !
பொதுநல மேடையைப் புறக்கணிக்கும் !
நன்மை வரும் என்றால் உண்மை
வேண்டும் செயலில் ! உழைப்பில்
உயர்வு வேண்டும் ! எத்தித்
திரியும் செயல் கூடாது ! ஏற்பதைப்
பொதுவில் வைக்க வேண்டும் !
மறைப்பதை மறுக்க வேண்டும் !
உருப்பட வேண்டும் என்றால் முதலில்
தடுப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்!
தவறுகள் களைய வேண்டும் !
தனித்தன்மை ஓங்க வேண்டும் !

Thursday, October 4, 2007

பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறந்த நாள் (05.10.2007) காணும் பெரிய பெண்ணே !
பெருமைகள் யாவும் பெற்றிடுவாய் !
அருமைச் செயல்கள் யாவும் புரிவாய் !
கொண்டான் குழந்தைகள் பேணிடுவாய் !
குடும்பம் செழிக்க குலமகள் நீயே
சிறந்திடுவாய் ! அன்பும் பண்பும்
ஆற்றும் கடமையில் சிறந்திடவே !
எல்லாம் வல்ல இறைவன் என்றும்
உனக்கே துணை புரிவான் !
வல்ல கணபதி வளர்ந்திட உன்னை
வாழ்த்திடுவார் ! என்றும் உனக்கே
எங்கள் வழிபாடு ! வாழ்க வாழ்க !
பல்லாண்டு ! வளமுடன் வாழ்க
நல்லாண்டு !
அன்புடன் செல்விஷங்கர்

Monday, October 1, 2007

வசந்தம்

இயற்கையின் இனிமை
இன்பத்தின் தனிமை
காற்றில் கரைந்த சுகந்தம்
ஆற்றில் மலர்ந்த ஆம்பல்
ஏட்டில் படர்ந்த பசுமை
பாட்டில் தவழ்ந்த மழலை
காலங்கள் தந்த கவிதை
பாலங்கள் இணைத்த பான்மை
வாழ்க்கையில் வீசிய தென்றல்
பார்க்கையில் சுவைத்த கன்னல்
வாழ்ந்தவர்க்குக் கடந்த காலம்
வாழ்பவர்க்கு நிகழ் காலம்
வருபவர்களுக்கு எதிர்காலம்
இறைமைக்கு எப்போதும் !!!!


நினைவு

நிலையாய் இல்லாதது

நிலைகளைக் கடந்தது !

காலத்தின் தத்துவம்

காலத்தால் கலைவது!

வளர்ச்சியில் உறைவது!

வாழ்க்கையில் வளர்வது!

எங்கெங்கோ ஓடி

எதையெல்லாம் தேடி

எதிர்பார்ப்பதை நாடி

ஏற்றத் தாழ்வுகளை மோதி

ஏற்பதை எதிர்கொள்வது!

இதற்கெல்லாம் விளக்கங்கள்

விளங்குவதில்லை விடியலில்

மாலைக்குள் மடிவதில்லை!

மறுநாளும் மலர்வது தான்!

வாழ்க்கை

வளர் சிதை மாற்றங்கள் உடையது

வாழ்ந்தவர் கோடி இங்கே!

வாழ்பவர் கோடி கோடி இங்கே!

வாழ்க்கை - காலங்காட்டாது!

இலக்கணத்தில் தொழிற்பெயர்!

இலக்கியத்தில் காப்பியம்!

விதிகள் இல்லாதது! விதிகளுக்குள் கட்டுப்பட்டது!

விளக்கங்கள் கூற முடியாதது!

கூறினால் அகமில்லை!

புறம் ! புறத்தினுள் புதுமையானது!

நாட்டுக்கும் மொழிக்கும் வேறுபட்டது!

நாட்டமெல்லாம் பொதுவானது!

சொல்லிக் கொடுத்த பாடமில்லை!

சொல்லாமல் கற்ற கவிதை!





Tuesday, September 25, 2007

கடமை

காலந் தவறாமல் செய்ய வேண்டும் !
கடின உழைப்பால் பெற வேண்டும் !
உழைப்பால் உயர உண்மை வேண்டும் !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம்மை !
போற்றிய செயல்கள் பேசும் நம்பெருமை !
விட்டுக் கொடுத்தால் உயர்வோம் !
வீட்டில் கடமை வெளியில் கடமை
வேத வாக்காய் விளங்க வேண்டும் !
பிள்ளைகள் பேச்சும் செயலும்
பெற்றோர் பின்புலம் ! மற்றவர்
பார்வை நம் உட்புலம் !
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்கள்
நாம் பெற்ற பேறு ! கற்றதின் பரிசு !
நன்செயல் எண்ணவும் இன்சொல் பேசவும்
தயங்காதே ! இதில் என்ன சுமை !
சுவை தானே இவை !
காலத்தால் அழியாத கவி அல்லவா !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம் அருமை !

மக்கள்

மரங்களை நட மறப்பவர்கள் !
உரங்களை மட்டும் இடுபவர்கள் !
இயற்கையைக் காக்க மறுப்பவர்கள் !
செயற்கையின் செழிப்பை அழிப்பவர்கள் !
இருப்பதை இழந்து விட்டு இங்கே
இல்லாததைத் தேடுபவர்கள்

உலகம்

ஓடிக்கொண்டிருப்பது !
நிற்பதற்கு நேரமில்லாதது !
இன்று விட்டால் நாளை இல்லை !
காலத்தால் மாறுவது !
கவிதையில் சிறப்பது !
உயிர்களைச் சுமப்பது !
உணர்வுகளை விதைப்பது !
மாற்றங்களை காண்பது !
மாற்றம் இல்லாதது !

அரிச்சுவடி

அன்பு காட்டு !
ஆற்றல் கொள் !
இன்பம் உணர் !
ஈகை செய் !
உண்மை உரை !
ஊதியம் போற்று !
எதையும் எதிர்கொள் !
ஏற்றம் காண் !
ஐயம் அகற்று !
ஒற்றுமை உயர்வு !
ஓவியம் சுவை !
ஒளவியம் அகற்று !
ஆய்தம் [ஃ] பயில் !

ஏன் ?

கண்கள் கசிவதற்குக் காரணம் என்ன ?
கருத்துகள் கலங்குவதற்கு அடிப்படை எது ?
புன்னகை பூப்பதற்கு பூமியே சுழல்வதேன் ?
பூக்களைப் பறிப்பதற்கு புத்துணர்வு ஏன் ?
பாக்களைப் படிப்பதற்கு பல்சுவை ஏன் ?

Saturday, September 22, 2007

ஏங்குவது

தரணியில் வாழ தாரக மந்திரம்
வேண்டாம்! ஊரக உணர்வு
வேண்டும்! எல்லாம் ஆசை தானே!
இல்லையெனில் உலகேது?

நினைத்தது

அன்பு காட்டப்பட வேண்டும்!
பாசம் உணர்த்தப்பட வேண்டும்!
பரிவு செயல்களில் வேண்டும்!
கண்களில் கருணை வேண்டும்!
கைகளில் செயல்கள் வேண்டும்!
மொத்தத்தில் தன்னைப் போல்
பிறரை எண்ண வேண்டும்!

நிகழ்ந்தது

அன்புக்கும் ஆசைக்கும்
அடித்தளம் இல்லாமல்
ஆளாக வளர்ந்தேன்!
காசு கொடுத்தால் கிடைக்குமா இவை!
என்னே! அறியாமை!
எங்கே இருக்கிறது உலகம்?
ஏட்டுக்குள் இருக்கிறதா? இல்லை
வீட்டுக்குள் இருக்கிறதா?

கடந்தது

பாசத்தைப் பார்க்காமல்
பண்பில் வளர்ந்தேன்!
நேசத்தைக் காட்டாமல்
நெறிகள் உணர்ந்தேன்!
பணம் இல்லாததால்
பக்குவப் பட்டேன்!

நான்

நெருப்புக்குள் குளிர் காய வேண்டும்!
பனிப் படிவுக்குள் பாய் விரிக்க வேண்டும்!
நதியோரம் அலை பாய வேண்டும்! நான்
கடலுக்குள் கனவு காண வேண்டும்!
தமிழ் உணர்வுக்குள் தலை சாய்க்க வேண்டும்!

தமிழ்

கன்னித்தமிழே!
உன்னைப் படித்ததால்
உயர்ந்தேனா? இல்லை
என்னை உணர்ந்ததால்
உயர்ந்தேனா? அது என்ன
பார்த்தாலே சுவையுணரும்
பா............உந்தன் பா!

Friday, September 21, 2007

அறிமுகப் பதிவு

வள்ளுவனின் வான் மறையையும் பாரதியின் பாவடிகளையும் படிக்கின்ற போது என் எண்ணம் சிறகடித்துப் பறக்கும். இவர்களால் எப்படி - இப்படி எழுத முடிந்தது? என்று.
இவர்கள் பார்த்ததை எழுதினார்களா? இல்லை வாழ்ந்ததை எழுதினார்களா?
வாழ்க்கை வரலாறே இல்லாத வள்ளுவன் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டினானே!
பாராத வாழ்வினைப் பார்த்து விட்டதாக பாடினானே பாரதி! இல்லை இல்லை! வாழ்ந்தானே பாரதி!
இவர்களின் எழுத்துகள் சொல்வதைப் போல் என் எண்ணம் பேச வேண்டும்! எழுத்து பேச வேண்டும்! இந்த பாரதத்தை பார் பேச வேண்டும்!
அதற்கு என் எழுதுகோல் இங்கே உலவ வேண்டும்!