Tuesday, October 6, 2009

பதிவுகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம்

பறவைகள் பலவிதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம் ! வானமெங்கும் ஓடி வானிலவைத் தேடி வண்ணங்கள் தீட்டுவது மனித மனம். அது ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. ஆனாலும் வடிகால் என்ற ஒரே நோக்கம் இங்கிருப்பது வியப்பே !

பல்வேறு பட்ட கருத்துகள் - பலதரப்பட்ட சுவைகள் - பலவாறான எண்ண ஓட்டங்கள் - எங்கு செல்வது ? எங்கே நிற்பது ? எதில் துவங்குவது ? தொட்டபின் தோல்விகள் - நிகழ்வுகளின் முரண்பாடு - ஏற்ற இறக்கங்கள் என்று எப்படி எப்படியோ எண்ணங்கள் இங்கே வலையில் அகப்ப்படுகின்றன.

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்பது போல் எழுத்து வடிவில் ஏக்கங்கள் - தூக்கங்கள் - துயரங்கள் - துன்ப வரைவுகள் - இன்ப நிகழ்வுகள் என எத்தனை எத்தனையோ இந்த வலைப்பூவில் பூக்கின்றன.

பதிவர்களின் நோக்கம் இடுகைகளில் தங்கள் இதயத்தை வடித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பு. பலரும் காண விரித்து வைக்கப்பட்ட நிலாப் படம். மொக்கைகள் தான் பெரும்பாலும் எல்லோராலும் சுவைக்கப் படுகின்றன.அவற்றினிற்குத்தான் ஆயிரக் கணக்கான மறு மொழிகள் .

சிந்தனை வாதிகளின் இடுகைகள் பலராலும் படிக்கப்பட்டாலும் மறுமொழிகள் மிகுதியாய்ப் பெறப்படுவதில்லை. நீண்ட இடுகைகள் நைல் நதியையும் மிஞ்சி விடுகின்றன. அவை பட்டனைத் தட்டியே நீளம் பார்த்து நகர்த்தி விடப்படுகின்றன. கதைகள் காளான் பூத்தது போல் தென்படும். சுவைத்தவர்கள் மறு மொழிகளில் தங்களைப் பதிவு செய்வர்.

சிரிப்பென்று சிரிப்பே வராத சிந்தனை வாதிகளின் சில இடுகைகளும் உண்டு. வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணப்படும். அதில் பதிவர்களின் ஆழந்த சிந்தனை ஓட்டம் புலப்படும்.

கவிஞர்கள் தான் கவிதைப் பூங்காவில் பூத்துக் குலுங்குபவர்கள். காதல் கவிதைகள் இளமையின் நிழலாய்த் தோன்றும்.துன்பக் கவிதைகள் துயர நினைவின் சிந்தனை அலை வீசும். சமுதாயப் பார்வையாளரின் கவிதைகள் உண்மையிலேயே உள்ளத்தைத் தொடும். உழைப்பின் உருவம் அவர்களின் எண்ண ஓட்டங்களில் தென்படும்.

செய்திகளைப் பதிவுகளில் இடுபவர்கள் சிலர். உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், உவகை ஊட்டும் நடிப்புச் செய்திகள், நாளெல்லாம் காண்கின்ற கேட்கின்ற நடைமுறைச் செய்திகள் என்று கவிஞர்கள் காவியமே புனைகின்றனர்.

படக்காட்சிகள்! இயற்கை! இயற்கையின் சீற்றம்!கடல்! காடு! மலை! விலங்கு! பறவை! கட்டடம்! திருவிழாக்கள்! தேரோட்டங்கள்! வாழ்க்கை! என்று நிழற்படங்களைப் பதிவுகளில் இடுவோர் பலர். கண்ணுக்கும் கருத்துக்கும் அவை சுவை கூட்டுகின்றன. இவை எல்லாம்
இவற்றின் நல்ல பக்கங்கள்.

மறு பக்கம் என்று ஒன்று உண்டல்லவா! அதன் விளைவு மேலானதாக இருப்பதில்லை. மனிதப் பண்பாட்டைச் சிதைப்பதாய் இருக்கின்றன.சில படக்காட்சிகள் கண்களை வலிக்கச் செய்கின்றன. சில கருத்துப் பதிவுகள் சிந்தனையை சீர்குலையச் செய்கின்றன. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று உலகினர் சிலரைச் சீண்டிப் பார்ப்பதும் சற்றே இடிக்கின்றது.

எண்ணங்கள் எழுத்துரு ஆகும் போது இலக்கணங்களை மீறாமல் இருந்தால் இனிமை சேர்க்கும். அறியாத வயதினர் ஆழ்ந்து தேடும் பக்கங்கள் மனத்தினை அலைபாயச் செய்கின்றன. பொழுது போக்காக, மன மாற்றாக, ஓய்வு நேர ஈடுபாடாக உயர்ந்த சிந்தனைகள் ஆங்காங்கே வலையில் பூப்பதும் உண்டு.

சிரிப்பதும் சிந்திப்பதும் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் எழுதுவதும் இளைப்பாறுதலாக இருக்கும் போது குழுமங்களும் பதிவுகளும் இடுகைகளால் சிறக்கின்றன. சிந்தனைப் பூக்க்கள் சிலிர் காற்றில் சிரித்து மகிழ்கின்றன. வெயிலுக்கு நிழலாக மழைக்குக் குடையாக இருந்தால் மகிழ்ச்சி தானே !

செல்வி ஷங்கர் - 06.10.2009

34 comments:

வால்பையன் said...

சீனா ஐயா படிக்கும் போது என்னை பற்றியும் ஒரு செய்தி இருந்ததே!

எடிட்டிங்கில் காணாமல் போய்விட்டதோ!?

சகாதேவன் said...

//கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று உலகினர் சிலரைச் சீண்டிப் பார்ப்பதும்//
சினிமாவுக்கு சென்ஸார், பத்திரிகைகு அனுப்பினால் எடிட் ஆகும். வலையில் என்னவும் எழுதலாம் எனும் சுதந்திரம் சில சமயம் படிக்க கஷ்டமாக இருக்கிறது
சகாதேவன்

தருமி said...

என்னையெல்லாம் ரொம்ப திட்டுறீங்களே ...!

:(

துளசி கோபால் said...

//சிரிப்பென்று சிரிப்பே வராத சிந்தனை வாதிகளின் சில இடுகைகளும் உண்டு.//

ஹாஹா........

செல்விஷங்கர் said...

இல்லை வால் - ஒரு சிறு மாற்றம் செய்தேன் அவ்வளவுதான்

செல்விஷங்கர் said...

உண்மை சகாதேவன்

எது வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கட்டற்ற சுதந்திரம் சில சமயங்களில் வருத்தத்தைத் தருகிறது

செல்விஷங்கர் said...

தருமி அண்ணே - உங்களை எல்லாம் திட்ட முடியுமா என்ன

செல்விஷங்கர் said...

துளசி - சிரிப்பே வராத இடுகைகள் இருக்கின்றனவா இல்லையா - அதத்தான் சொன்னேன்

RAMYA said...

உங்கள் இடுகையை இன்றுதான் படிக்கறேன்.

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க!

நீங்க எழுதி இருப்பது சத்தியமான உண்மை. ஆபாசம் யாராலும் ரசிக்கப் படுவதில்லைதான். எல்லை மீறிய எழுத்துக்கள் ரசிக்க முடியாமல் போகுது.

உங்கள் வருத்தமும் சமுதாய நோக்கமும் எனக்கு புரிகிறது.

இது போல் எழுதறவங்க சில தர்மங்களை கடை பிடித்தால் நன்றாக இருக்கும்.

படிக்கும் போது ஏற்படும் தர்ம சங்கடங்களை தவிர்க்கலாம்...

Ungalranga said...

//சிரிப்பென்று சிரிப்பே வராத சிந்தனை வாதிகளின் சில இடுகைகளும் உண்டு. //

இதில் எதோ உள்குத்து இருப்பதாய் தெரியுதே!!

செல்விஷங்கர் said...

அன்பின் ரம்யா

தொடர்ந்து படியுங்கள்

நல்ல கருத்து நன்றி

செல்விஷங்கர் said...

ரங்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உட்குத்து வெளிக்குத்து - இதெல்லாம் இல்லப்பா இங்க

இராகவன் நைஜிரியா said...

அழகான இடுகை. பல விசயங்களை மிக சரியாக, அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

சதங்கா (Sathanga) said...

வலைப் பின்னல்களுக்குள் புகுந்து பலதரப்பட்ட பதிவுகளையும் பிரித்து போட்டு அலசியிருக்கிறீர்கள்.

//உங்கள் வருத்தமும் சமுதாய நோக்கமும் எனக்கு புரிகிறது. //

அதே ! அதே !!

ராமலக்ஷ்மி said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் தங்கள் பதிவு, நிறைவு. பதிவுகள் பற்றிய தங்கள் கண்ணோட்டம் சிறப்பு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இஷ்டப்படி எழுதுவதை பார்க்கும்போது வருத்தமாகவே இருக்கு...

சில சமயம் நம்மையும் மொக்கை போட தூணுவது நிஜம்தான்...

சில கவிதையிலேயே ஆபாசம், அதுக்கு பல ஆதரவும்... சகிக்க முடிவதில்லைதான்..

நல்லதொரு அலசல்...

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராகவன்

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புன்னகை தேசம்

மங்களூர் சிவா said...

/
சிரிப்பதும் சிந்திப்பதும் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் எழுதுவதும் இளைப்பாறுதலாக இருக்கும் போது குழுமங்களும் பதிவுகளும் இடுகைகளால் சிறக்கின்றன.
/

சிறப்பானதையே தருவோம் சிறப்பானவைகளை தேடி படிப்போம்.
:))

Sanjai Gandhi said...

ஆஹா.. பதிவுகள் எழுதலைனாலும் ரொம்ப நல்லா வாட்ச் பன்றிங்க போல.. :))

டைரியில் இருக்கும் பதிவுகள் அனைத்தும் விரைவில் டிஜிட்டலில் வர டைப்பிஸ்டை வேண்டுகிறேன். :))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

உதயம் said...

லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

செல்விஷங்கர் said...

சிவா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

செல்விஷங்கர் said...

சஞ்செய்

வருகைக்குக் கருத்துக்கும் நன்றி சஞ்செய்

தட்டச்சர் பயங்கர பிஸி - மூச்சு விட நேரமில்லை அவருக்கு - என்ன செய்வது

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\SanjaiGandhi said...
ஆஹா.. பதிவுகள் எழுதலைனாலும் ரொம்ப நல்லா வாட்ச் பன்றிங்க போல.. :))//


அட ஆமால்ல.. :)) அலசித் துவைச்சு காயப்போட்டுட்டீங்க..

ம் மனிதர்கள் பலவிதம் அதனால் பதிவுகளும் பலவிதம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதி இருப்பது அருமை.. தவறு செய்பவர்களையும் வலிக்காமல் தட்டி இருப்பது நயம்..

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திகைப் பாண்டியன்

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலட்சுமி

நையாண்டி நைனா said...

என்னை பற்றி ஒன்னும் சொல்லலியே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செல்விஷங்கர் said...

பல பதிவுகள் இன்னும் படிக்க வில்லை - அதில் நையாண்டியும் ஒன்று

எழுதுகிறேன்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html